July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சில ஊடகங்கள் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்த முயல்கின்றன’

ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட வேண்டுமா?, இல்லையா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ,சில ஊடகங்கள் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்த முயல்கிறது.ஆனால் அது என்னிடம் பலிக்காது என்றும் இவ்வாறானவர்களுக்கு பாடம் புகட்ட எனக்குத் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா – வலப்பனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் என்னை 60 மாதங்களுக்கு ஆட்சிப் பொறுப்புக்காக நியமித்துள்ளார்கள்.இப்போது 14 மாதங்கள் கடந்துள்ளது.இந்த காலப்பகுதியில் கிராமங்களை அபிவிருத்தி செய்வதே எனது தேவை.

நான் மீண்டும் ஜனாதிபதியாக வரமாட்டேன் என பலர் கவலை அடைந்துள்ளனர். ஆனால் மக்கள் தான் அதனை தீர்மானிக்க வேண்டும்.

முதலில் 60 மாதங்களுக்கு வேலை செய்வதே எனது எதிர்பார்ப்பு. அதன் பின்னரே ஏனையவற்றை பற்றிச் சிந்திக்க முடியும்.

நான் கிராமங்களுக்கு வருவதால் தான் சாலைகள் புனரமைக்கப்படுகின்றன.குறுகிய சாலைகள் அமைக்கப்பட்டமையினாலேயே இன்று துரதிர்ஷ்டவசமாக பசறை பஸ் விபத்து இடம்பெற்றது.

ஊடக சுதந்திரம் என்பது ஊடகத்தின் உரிமையாளருக்கு தேவையான விதத்தில் செய்திகளை வெளியிடுவது இல்லை, அவ்வாறு செய்தால் அது ஊடக மாபியாவாக கருதப்படும்.

இவர்கள் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்த முயல்கின்றார்கள்.என்னிடம் இது பலிக்காது. இவர்களுக்குப் பாடம் புகட்ட எனக்கு தெரியும்.

14 மாதங்களாக நான் எந்த ஊடகத்திற்கும் அடக்குமுறைகளைப் பிரயோகிக்கவில்லை. எனினும் ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்த முனைபவர்களுக்கு எதிராக நீதியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க என்னால் முடியும்.

நாம் எப்போதும் இயற்கை சூழலை அழிக்கவில்லை, இவ்வாறான பொய்யான தகவல்களை வெளியிடுபவர்கள் யார் என எனக்கு தெரியும்.யுத்த காலத்தில் பொய்யான தகவல்களை வெளியிட்ட ஊடகங்களே இப்போதும் இவ்வாறு செயற்படுகின்றன.

கடந்த அரசாங்கத்தில் காடுகள் அழிக்கப்பட்டன. அதனை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. அப்போது அவர்களுக்கு தேவையான அரசாங்கம் இருந்தது. எனவே அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.

தற்போது பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் பரப்பி மக்களை திசை திருப்ப முயல்கின்றனர்.

இந்தியாவின் ஒடிசாவில்,மரங்கள் வெட்டப்பட்ட காட்சிகளை ஜே.வி.பி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இலங்கையில் இடம்பெற்றதாக தவறான பிரசாரங்களை முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.