July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை – பங்களாதேஷ் இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன!

(Photo : twitter/@PresRajapaksa)

இலங்கை – பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் இன்று டாக்கா நகரில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இடம் பெற்றது.

இதன்போது இளைஞர் விவகாரத்தை அபிவிருத்தி செய்தல், விவசாயத்துறை, திறன் அபிவிருத்தி பறிமாற்றம், சுகாதார தாதிகள் சேவை பறிமாற்றம், அனைத்துலக ஒத்துழைப்பு கல்வி மற்றும் 2021-2025 வரையிலான அனைத்து கலாசார பறிமாற்றம் செயற்திட்டம் ஆகிய விடயங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அத்தோடு இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், முதலீடு, சந்தை, தொழிநுட்பம், விவசாயம், கடற்றொழில் கைத்தொழில் மற்றும் அரசியல் உறவு ஆகியவற்றை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை மாணவர்கள் பங்களாதேஷ் நாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை பெற்றுக் கொள்ள பங்களாதேஷிற்கு வருகை தருமாறு திருமதி. ஷெயிக் ஹசீனா அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவையை விரிவுப்படுத்தி சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய துறைகளை முன்னேற்றுவது குறித்தும் இதன்போது  கலந்தாலோசிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 50 ஆவது வருட ஆரம்பத்தை முன்னிட்டு  விரிவுப்படுத்தப்பட்ட அரசியல் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பிலான யோசனைகள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.

தீவிரவாதம் மற்றும் மனித கடத்தல் வியாபாரம் ஆகியவற்றை முழுமையாக இல்லாதொழிக்க தேவையான நடவடிக்கைகளை செயற்படுத்தவும் இந்த பேச்சு வார்த்தையின் போது இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

 

This slideshow requires JavaScript.