July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘காணி,பொலிஸ் அதிகாரங்களுடன் மாகாணசபை தேர்தலை நடத்த இடமளிக்கமாட்டோம்’

மாகாண சபைக்கான அதிகாரங்களை முழுமையாக நீக்கிய புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரே மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும். காணி,பொலிஸ் அதிகாரங்களுடன் மாகாணசபை தேர்தலை நடத்துவதென்றால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தலை நடத்தியாக வேண்டும் என தமிழ் அரசியல் தலைமைகள் வலியுறுத்தியுள்ள நிலையிலும்,தேர்தலை நடத்துவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்துள்ள நிலையிலும் மாகாணசபை தேர்தல் குறித்து அரசாங்கத்திற்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றது.

இந்நிலையில் தேர்தல் குறித்து இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவிக்கையில்,

மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமா அல்லது கைவிடப்பட வேண்டிய ஒன்றா என்பது குறித்து முதலில் ஆழமாக ஆராய்ந்து, சகல தரப்புடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அதன் பின்னர் தீர்மானிக்க வேண்டிய ஒன்றாகும்.

மாகாணசபை தேர்தலை நடத்தினால் அதற்கான செலவுகள், அவ்வாறு அதிகளவு பணத்தை விரையம் செய்வதினால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.

இலங்கைக்கு மாகாணசபை முறைமை அவசியமில்லை என்பதே எனது கருத்தாகும். எனது இதே நிலைப்பாட்டில் அரசாங்கத்தில் பலர் உள்ளனர்.

எனினும் அரசாங்கமாக தீர்மானம் எடுக்கையில் தனித்தீர்மானம் எடுக்காது சகலரும் இணைந்து பேச்சுவார்த்தைகளின் மூலமாக தீர்மானிக்க வேண்டும்.
மாகாணசபை முறைமை என்பது ஒரு சிலரின் அதிகார மோகத்திற்காக வேறு நாடுகளின் தலையீட்டில் எமக்கு திணிக்கப்பட்டதாகும். நாமாக விரும்பி இதனை பெற்றுக்கொள்ளவில்லை.

எமது அரசியல் அமைப்பில் எமக்கு பிடிக்காத ஒரு விடயத்தை உள்நுழைத்துக்கொண்டு இத்தனை காலமாக கொண்டு செல்கின்றோம். எனவே இனியும் எமக்கு இவ்வாறான அனாவசிய சரத்துக்கள் அவசியமா என்பதையும் நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

இப்போது எமது நாட்டிற்கு புதிய அரசியல் அமைப்பு ஒன்றே அவசியப்படுகின்றது. எனவே புதிய அரசியல் அமைப்பின் பின்னர் தேர்தல் குறித்து சிந்திக்க வேண்டும். இப்போதுள்ள முறைமைக்கு அமைய அதிகாரங்களுடன் கூடிய மாகாணசபை தேர்தலை நடத்தக்கூடாது.முதலில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி, மாகாணசபைக்கான அதிகாரங்களை நீக்கிவிட்டு தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறு இல்லையேல் அரசாங்கத்தில் இருந்துகொண்டே இந்த முறைமையை நாம் முழுமையாக எதிர்ப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.