May 16, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடையுத்தரவுகளை தாண்டி மட்டக்களப்பில் ‘சர்வதேச நீதி கோரி’ போராட்டம் முன்னெடுப்பு

நீதிமன்ற தடையுத்தரவுகளை தாண்டி ‘சர்வதேச நீதிகோரி’ பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சி பேரணி இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சர்வதேச நீதிகோரி 17 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை நிறைவு செய்யும் வகையிலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதி கோரியும் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

‘தமிழர் தாயகத்தினை அங்கீகரிக்கவும்’, ‘இந்திய இராணுவத்தினை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும்’ மட்டக்களப்பில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதி உண்ணாவிரதம் ஆரம்பித்த தினமான மார்ச் 19 ஆம் திகதியை நினைவு கூரும் முகமாகவே இந்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால் குறித்த போராட்டத்தில் ஈடுபடும் 25 பேருக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்ததுடன், காந்தி பூங்கா மற்றும் மாமாங்கம் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்ற தடையுத்தரவும் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்ற தடையுத்தரவுகள் காரணமாக போராட்டம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சித்தாண்டி, மாவடிவேம்பு மருங்ககையடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள்,அங்கிருந்து பேரணியாக சித்தாண்டி சந்திப்பிள்ளையார் ஆலயம் வரையில் பேரணியாக வந்தனர்.

இதன்போது ‘தமிழர் தாயகப் பகுதியை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும்’, ‘அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்த வேண்டும்’, ‘தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிமன்றம் ஊடாக தீர்வினை வழங்க வேண்டும்’, ‘ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானத்தினை நிகாரிப்போம்’, ‘கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும்’, ‘மேய்ச்சல் தரை நிலத்தினை மீட்டுத்தாருங்கள்’, ‘எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்’ உட்பட பல்வேறு கோஷங்களை பேரணியில் கலந்துகொண்டவர்கள் எழுப்பியிருந்தனர்.

பேரணி ஆரம்பமான வேளையில்,அங்கு வந்த ஏறாவூர் பொலிஸார் தடையுத்தரவு உள்ளதாகக் கூறி போராட்டத்தினை நிறுத்துமாறு கோரிய போதிலும், பொலிஸார் போலியான தடையுத்தரவினை காட்டி பேரணியை தடுக்க முனைவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துவிட்டு, போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தனர்.

தடைகளை தாண்டி முன்னெடுக்கப்பட்ட பேரணியானது சித்தாண்டி சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றதும் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், அங்கு ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு அனுப்பிவைக்கும் மனுவொன்றும் வாசிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப்பேரணி இயக்கத்தின் வட-கிழக்கு ஏற்பாட்டாளர்களான வேலன் சுவாமி,எஸ்.சிவயோகநாதன், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

This slideshow requires JavaScript.