May 27, 2025 17:06:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசிரியர் சங்கங்கள் ஏட்டிக்குப் போட்டியாக ஆர்ப்பாட்டம்: கல்வி அமைச்சுக்கு முன்னால் அமைதியின்மை!

பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆசிரியர் சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் இருவேறு ஆர்ப்பாட்டங்களால் அந்தப் பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான வகையில் சங்கமொன்றும், அரசாங்கத்திற்கு ஆதரவான வகையில் மற்றுமொரு  சங்கமும் ஒரே இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் நிலையிலேயே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அதிபர் மற்றும் கல்வி நிர்வாக சேவையில் காணப்படும் வெற்றிடங்களை பூர்த்தி செய்யுமாறும், அரசியல் நியமனங்களை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தி ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான ஆசிரியர் சங்கங்களின் கூட்டணி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இதேநேரத்தில், ஒன்றிணைந்து எமது பலத்தை காட்டுவோம் என்று அரசாங்கத்திற்கு ஆதரவான பொதுஜன கல்வி சேவைகள் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.

இரண்டு ஆர்ப்பாட்டங்களும் கல்வி அமைச்சுக்கு முன்னால் வீதியில் நடத்தப்படும் நிலையில் இரண்டு தரப்பினரும் மோதிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸாரினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இரண்டு தரப்பினரும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் அந்தப் பகுதியூடான வாகன போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.