July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் அறிந்திருக்க வேண்டியவை

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கான திருத்தப்பட்ட புதிய தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகள் அடங்கிய சுற்றுநிருபம் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கை பிரஜைகள், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்

கொரோனா தடுப்பூசி பெற்று இரண்டு வாரங்களின் பின்னர் நாட்டிற்கு வருகை தரும் இலங்கை பிரஜைகள் மற்றும் இரட்டைக் குடியுரிமை கொண்டோர் விமான நிலைய வைத்திய அதிகாரியிடம் தடுப்பூசி பெற்றுக்கொண்டமைக்கான சான்றிதழின் முதற்பிரதியை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், அவை ஆங்கிலம் தவிர்ந்த வேறு மொழிகளில் காணப்பட்டால் உறுதிப்படுத்தப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு சான்றிதழ் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

அத்தகைய பயணிகளை அரச அதிகாரிகள் தனிமைப்படுத்தல் ஹோட்டல்கள் அல்லது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைப்பார்கள், பயணிகள் நாட்டிற்கு வந்து 24 மணிநேரத்திற்குள் சுகாதார அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்ட தனியார் அல்லது அரச இரசாயனக்கூடமொன்றில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அதன் முடிவு கிடைத்தவுடன் அவர்கள் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அதன் பின்னர் அவர்கள் தனியார் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி வீடுகளுக்கு செல்ல முடியும்.

தடுப்பூசி போடாதவர்கள்

கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாமல் நாட்டிற்கு வருவோரை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் காலம் 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் முதலாவது நாள் மற்றும் 7 ஆவது நாளில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

இந்தப் பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாவிட்டால், அவர்கள் 7 ஆவது நாளில் ஹோட்டல் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ய முடியும்.

எனினும் 14-நாள் கட்டாய தனிமைப்படுத்தல் காலப்பகுதியின் எஞ்சிய நாட்களை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் வீடுகளில் நிறைவு செய்ய வேண்டும்.

பொதுவான தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவோர் முதலாவது நாளிலும் 10 ஆவது நாளிலும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இந்த இரண்டு பரிசோதனைகளின் போதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படாவிட்டால் 10 ஆவது நாளில் தனிமைப்படுத்தலில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

அவர்கள் எஞ்சிய 4 நாட்களும் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.

சுற்றுலாப் பயணிகள்

வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்ட ஹோட்டல்களிலேயே தங்க வேண்டும்.

இதன்போது முதல்நாளில் பிசிஆர் பரிசோதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவர்; தொற்று இல்லை என்றால், சுகாதாரப் பாதுகாப்புடன் அனுமதியளிக்கப்பட்ட இடங்களுக்கு அவர்களுக்கு செல்ல முடியும்.

எனினும், அவர்கள் மீண்டும் அதே ஹோட்டலில் தங்க வேண்டும்.

அதன் பின்னர், 7 ஆம் நாளில் இரண்டாவது பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும். இதில் தொற்று இல்லை என்பது உறுதியானால், அவர்கள் விரும்பிய இடங்களுக்கு செல்லலாம்.

பீசிஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதியானால் இலங்கையின் சுகாதாரத் துறை அதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைவாக சிகிச்சை நடைமுறைகள் தொடங்கும்.