July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனி இறக்குமதி ஊழல் குற்றச்சாட்டு; விளக்கம் அளிக்க தயாராகிறது அரசு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில், இது தொடர்பில் நிதி அமைச்சின் சார்பில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கான வரி குறைப்பின் மூலமாக அரசாங்கத்துக்கு தேவையான சில வியாபாரிகளுக்கே நன்மை கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதான எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றன.

வரிகுறைப்பு இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த ஒரு நிறுவனம் மாத்திரம் கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 26 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனியை இறக்குமதி செய்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

அத்தோடு இவ்வாறான வரி குறைப்பின் மூலம் அரசாங்கத்துக்கு கிடைத்துவந்த லாபம் இல்லாமலாகியதால் 15.9 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு பாராளுமன்ற பொது மக்கள் நிதிக் குழுவுக்கு அறிவித்துள்ளதையும் எதிர்க் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன் சதோச நிறுவனம் கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி ஒரு கிலோகிராம் சீனியை 127.49 சதம் என்ற அடிப்படையில் 700 மெட்ரிக் தொன்களை பெற்றுக்கொண்டு ஒரு கிலோகிராம் சீனியை 85 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

குறித்த காலப்பகுதியில் அரசாங்கம் சீனி இறக்குமதி செய்த விதிமுறை எவ்வாறானது, அதனால் கிடைத்த வருமானம் மற்றும் முறைகேடுகள் இடம்பெறாத வகையில் எவ்வாறு இதனை கையாண்டனர் என்பது குறித்து நிதி அமைச்சு தற்போது அறிக்கை ஒன்றினை தயாரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்த அறிக்கையையும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அறிவிக்கும் விதமாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலினால் எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்று விடுக்கப்படவுள்ளது.