October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பு மாநகர சபை அமர்வு செயலாளர் இல்லாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாநகர சபையின் அமர்வு செயலாளர் இல்லாத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாநகர சபைக்கான செயலாளர் நியமிக்கப்படாத காரணத்தினால் மாநகர ஆணையாளரே பதில் செயலாளராகச் செயற்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் மாநகர சபையின் 45 ஆவது அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் சபையின் பதில் செயலாளராகச் செயற்படும் மாநகர ஆணையாளர் கூட்டத்திற்கு வருகை தரவில்லை.

இன்றைய அமர்விற்கு மாநகர ஆணையாளரால் பதில் செயலாளர் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், அவர் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை. தான் சபைக்கு வராமை குறித்து அவரால் எவ்வித அறிவிப்பும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன், அதற்கு பதிலாக எவரையும் நியமிக்கவில்லை.

இந்த விடயங்களை சுட்டிக்காட்டிய சபை முதல்வர், செயலாளர் இல்லாமல் சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது எனவும் இதனால் சபையை ஒத்தி வைப்பதாகவும் அறிவித்தார்.

இந்த அறிவித்தலைத் தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

அவ்வாறு சபையை ஒத்திவைக்க முடியாது எனவும் சபையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் சில உறுப்பினர் கோரிக்கைகளை முன்வைத்த போதும், செயலாளர் இல்லாமல் எவ்வாறு சபையை நடாத்துவது? என்றும் சபை நடவடிக்கைகளை அறிக்கையிடுவது யார்? என்றும் சில எம்.பிக்கள் கேள்வியெழுப்பியதுடன் சபையை ஒத்தி வைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.