October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அர்ஜுன மகேந்திரனை ஒப்படைப்பதற்கான ஆவணங்களை சிங்கப்பூர் ஆராய்கிறது’

இலங்கையின் மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதலாம்-சந்தேகநபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை ஒப்படைக்குமாறு கோரும் ஆவணங்கள் மூன்றாவது தடவையாகவும் சிங்கப்பூர் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டமா அதிபரின் அலுவலகம் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்துள்ளது.

இதன்படி, குறித்த ஆவணங்கள் சிங்கப்பூர் சட்டமா அதிபரால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க நீதிபதிகளிடம் அறிவித்தார்.

சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொட்டவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த வழக்கின் 10 ஆவது சந்தேகநபரான பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜஹான் கார்திய புஞ்சிஹேவா தற்போது மலேசியாவில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதெனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனவே, குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நோக்கில், இலங்கை வெளியுறவு அமைச்சு மற்றும் மலேசியாவிற்கான இலங்கைத் தூதரகம் ஊடாக மலேசிய அரசுக்கு அறிவித்தல் அனுப்புவதற்கும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரத்துடன் மேலும் ஒரு குற்றப்பத்திரம் இணைக்கப்பட்டு, திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர மன்றில் அறிவித்தார்.

இதனடிப்படையில், அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜஹான் கார்திய புஞ்சிஹேவா ஆகியோரை மன்றில் ஆஜர்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் மன்றுக்கு அறிவிப்பதற்காக, குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.