July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பட்டிப்பளை பிரதேசத்தில் 1500 ஏக்கர் காட்டை அழித்து இராணுவ முகாம்’: சிறீதரன் எம்.பி. குற்றச்சாட்டு

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் தாந்தாமலை பகுதியில் 1500 ஏக்கர் காட்டை அழித்து, இராணுவ முகாம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசாங்கம் காணி விடயத்தில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையை மிகத் துல்லியமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு, மாதவனை போன்ற பிரதேசங்களில் உள்ள 4000 ஏக்கர் மேய்ச்சல் தரைகளை, பயிர் நிலங்கள் என்ற போர்வையில் தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான முயற்சி இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் இராணுவ முகாம், தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம், சிங்களக் குடியேற்றங்கள் என பல்வேறு விதமாகவும் அபகரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் இருப்பையும் செறிவுத் தன்மையையும் கேள்விக்கு உட்படுத்தும் இவ்வாறான வெளிப்படையான காணி அபகரிப்பை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், அதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.