July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“வன்னியில் காடுகள் அழிக்கப்படுவது முழு நாட்டுக்கும் கேடு”- பாதுகாப்புச் செயலாளர்

வவுனியா மாவட்ட செயலகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னர் தவறான வழிகளில் சென்ற இளைஞர், யுவதிகளை அரசாங்கம் சரியாக வழிநடத்தியதாகக் கூறினார்.

“வவுனியா மாவட்டத்தில் பல்வேறு சேவைகளை செய்துள்ளோம். இறுதிப் போர் காரணமாக இடம்பெயர்ந்து வந்த மூன்று இலட்சம் மக்களைத் தங்க வைத்து அவர்களின் நலன்களை பேணியுள்ளோம்.

அவர்களை துரிதமாக மீள்குடியேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம்.

நிலங்களை இழந்த மக்களுக்கு அவர்களின் நிலங்களில் விவசாயம் செய்ய நடவடிக்கை எடுத்தோம். அவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுத்தோம்.

பிழையான வழிகளில் சென்றிருந்த இளைஞர்கள், யுவதிகளை சரியான வழியில் செல்வதற்கும் வழிகாட்டியிருந்தோம். அந்தக் கடமைகளை நாம் கச்சிதமாக செய்தோம்.

“கவலைக்கிடமான நிலையில் வன்னி”

அப்போதைய வவுனியா மாவட்ட செயலாளர் சார்ள்ஸ் மற்றும் அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோருடன் இணைந்து அதனை முன்னெடுத்தோம்.

இன்று வன்னிப் பிரதேசத்தில் மிகவும் கவலைக்கிடமான நிலையை அவதானிக்கின்றோம்.

இங்கு இருக்கின்ற அதிகளவிலான வனப் பிரதேசங்கள் அவசர அவசரமாக, தீவிரமாக அழிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

வடக்கில் காடுகள் அழிக்கப்படுவது என்பது வடக்குக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கும் ஆபத்தானது. இந்தக் காடழிப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரச அதிகாரிகளும் எம்மோடு கைகோர்க்க வேண்டும்.

பாதுகாப்புத் தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் வழிகாட்டலுக்கு அமைவாக எமக்கு ஆலோசனைகள் கிடைத்துள்ளன” என்றார்.