October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘காணி ஆவணங்களை கையாளும் அலுவலகம் வடக்கிலேயே இருக்கவேண்டும்’

காணி ஆவணங்களை கையாளும் அலுவலகம் வடக்கில் இருப்பதே சிறப்பானது. அதனை உரிய அமைச்சரிடம் வலியுறுத்தியிருக்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியா, நெடுங்கேணியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்;

‘எல்.ஆர்.சி. காணிக்குரிய ஆவணங்களே அனுராதபுரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அது கடந்த காலங்களிலும் அனுராதபுர பிராந்திய காரியாலயத்தால் தான் பார்க்கப்பட்டிருந்தது. இரண்டு வருடங்களிற்கு முன்பாக எனது கோரிக்கைக்கு அமையவே வடமாகாணத்திற்கு வந்தது.

மீண்டும் குறித்த விடயம் அவசரமாக அங்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக உரிய அமைச்சருடன் பேசியிருக்கிறேன். சில செயற்பாடுகளை இலகுவாகவும் அவசரமாகவும் செய்வது தொடர்பாக சில காரணங்கள் அவரால் சொல்லபட்டது.

அது பொருத்தமில்லாத காரணம் என கூறியிருந்தேன். வடமாகாணத்திலேயே இந்த காரியாலயம் இருக்கவேண்டும் என்று எனது கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறேன். இங்கு இருக்கவேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பமும். எனவே மீண்டும் ஒருமுறை அமைச்சருடன் பேசவுள்ளேன்’ என்றார்.

‘இந்த அரசாங்கம் அபிவிருத்தி என்று பார்க்கும் போது வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒரே மாதிரியான நிதியையே ஒதுக்கி வருகின்றது.வாக்கு வீதங்கள் இங்கு பார்க்கப்படுவதில்லை.தெற்கில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இலட்சக்கணக்கில் வாக்குகளை பெற்றார்கள்.எங்களுக்கோ குறைந்த விருப்பு வாக்குக்கள் தான் கிடைத்தன. அவர்கள் எங்களிடம் நேரடியாக கேட்கிறார்கள் இலட்சக்கணக்கில் வாக்குகள் பெற்ற எமக்கும் வேலைவாய்ப்பில் 600 பேர் தான்.மூவாயிரம் விருப்பு வாக்குகளை பெற்றவர்களிற்கும் 600 பேர்தான் என்று.

வாக்கு வீதத்திற்கு ஏற்றாற்போல அபிவிருத்தி செய்யுமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றார்கள்.ஆனால் எமது தலைமை அதனை நிராகரித்துள்ளது.

பல சமூகங்கள் வாழ்கின்ற நாட்டில் உரிமை சார்ந்த பிரச்சினைகள் இருக்கிறது. அதனை நசுக்கும் அளவிற்கு நாம் பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம். அனைத்தையும் பேசி தீர்மானிப்போம்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.