October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய்யானது”: ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதலுக்குடன் தன்னையும், பஸில் ராஜபக்‌ஷவையும் தொடர்புபடுத்தி  எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய்யானது என்று  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

‘கிராமத்துடன் உரையாடலின்’ 14ஆவது நிகழ்ச்சி இன்று காலி மாவட்டத்தில் உள்ள ஹிக்கடுவ பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால்  தானும், பஸில் ராஜபக்‌ஷவும், நிசங்க சேனாதிபதியும் இருப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த விடயம் குறித்து அந்த பாராளுமன்றத்தை உறுப்பினரை அழைத்து விடயங்களை கேட்டறியுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தான் அறிவித்திருந்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி அந்த எம்.பியிடம் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை கேட்ட போது, ‘எனக்குத் தெரியாது. நான் மறந்துவிட்டேன்’  என்று அவர் கூறியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் எப்போதுமே இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுகளையே முன்வைப்பதாகவும். இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிக்கிறேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும். ஆனால் அவை உண்மையான தகவல்களாக இருக்க வேண்டும். மக்களை ஏமாற்றுகின்ற பொய்யான தகவல்களை வெளியிடுவது கூடாது. ஒரு அரசியல்வாதியிடம் இருந்து நாங்கள் அவ்வாறான விடயங்களை எதிர்பார்க்க மாட்டோம் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் குருணாகல் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, ஈஸ்டர் தாக்குதலுடன் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ ஆகியோருக்கு தொடர்புள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.