July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிவராத்திரி தினத்தன்று சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்; வடமாகாண மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தீவிரமடைந்து வரும் கொவிட் – 19 பரம்பல் இடர்நிலையில் சிவராத்திரி நாள் வழிபாடுகள் நாளை நடைபெறவுள்ள நிலையில் கடந்த வாரத்திலிருந்து யாழ். மாவட்டத்தில் கொவிட் – 19 பரவல் தீவிரமடைந்து வருகின்றதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவதானமாக சமூக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களமும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கோவில்களில் நடைபெறவுள்ள சிவராத்திரி வழிபாடுகளில் ஆகக் கூடியதாக 50 பேரை மட்டும் அனுமதிக்குமாறும் ஏனையோர் வீடுகளில் தங்கி நின்று எங்கும் நிறைந்துள்ள இறைவனை மனதிலிருத்தி வழிபாடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் சிவராத்திரி நாளுடன் இணைந்து கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார நிகழ்வுகளை இரத்து செய்யுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வேண்டுகோளுக்கு இந்து மதகுருமார்கள், இந்து மதத் தலைவர்கள், கோவில் அறங்காவலர் சபைகள், பக்தர்கள் மற்றும் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.