July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையின் பொறுப்புக்கூறல் அறிக்கை 6 மாதங்களில் கோரப்பட வேண்டும்’: வரைவில் மாற்றம் கோரும் பிரிட்டிஷ் எம்.பி.

இலங்கை மீதான ஐநா வரைவுத் தீர்மானத்தில் பொறுப்புக்கூறல் தொடர்பாக 18 மாதங்கள் வழங்கப்படுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், 6 மாதங்களில் பொறுப்புக்கூறல் அறிக்கை கோரப்பட வேண்டும் என்றும் பிரிட்டன் தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் கினோக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் கினோக், பிரிட்டனின் ஆசிய பிராந்தியத்துக்கான அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் தலைமையிலான நாடுகள் இலங்கை மீது முன்வைத்துள்ள வரைவின் உள்ளடக்கம் வலுவானதாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் கினோக் 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளதோடு, வரைவுத் தீர்மானத்தில் குறித்த கோரிக்கைகளுக்கு அமைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு உலகளாவிய அதிகாரக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதனை பிரிட்டன் வரைவில் திருத்துமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தைப் பரிந்துரைக்கத் தவறியுள்ளதாகவும், வரைவில் அது உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐநா பாதுகாப்பு சபைக்கான பிரித்தானிய அரசாங்கத்தின் அணுகுமுறை, ஐநா நிரந்தர உறுப்பு நாடுகள் இரண்டின் மறுப்பாணையால் (Veto) தீர்மானிக்கப்படக் கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அதிகாரிகளின் அத்துமீறிய செயற்பாடுகளில் இருந்து மனித உரிமை செயற்பாட்டாளர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஐநா தீர்மானம் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.