July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போதைப்பொருளுடன் 3 இலங்கைப் படகுகளை மடக்கிப்பிடித்தது இந்தியக் கடற்படை

Fishery Boats Common Image

(File Photo)

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று இலங்கை படகுகளை இந்தியக்கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, படகில் பயணித்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியக்கடற்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட மூன்று இலங்கை படகுகளும் கேரளாவின் விஜின்ஜாம் கடற்பரப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது அங்கீகரிக்கப்படாத தொலைதொடர்பு சாதனம் மற்றும் 200 கிலோ கோகோயின், 60 கிலோ ஹஷிஷ் போதைப்பொருட்கள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பை இந்திய கடற்படையினர் உடனடியாக வெளியிடவில்லை.

குறித்த முற்றுகையின் போது, 19 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த படகுகளிருந்து ஏழு பேர் கடலில் குதித்து தப்பியுள்ளனர்.

இதன்போது பெரும் தொகை போதைப்பொருட்கள் கடலில் வீசப்பட்டதாகவும் இந்திய கடற்படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடலில் குதித்தவர்களைக் கண்டுபிடிக்க உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடையவர்களா என்பது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.