October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பெண்கள் மீதான வன்முறைகளை இல்லாதொழிக்க மக்கள் மனநிலையில் மாற்றம் தேவை’: ஐநா வதிவிட பிரதிநிதி

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாட்டை இல்லாதொழிப்பதற்கு மக்களின் மனநிலையில் மாற்றங்கள் தேவைப்படுகின்றதாக இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்தி தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐநா வதிவிட பிரதிநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிராக அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைத்து வகையான பாரபட்சமான சட்டங்களையும் இரத்துச் செய்வதற்கான முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகச் சமமான எதிர்காலமொன்றை வடிவமைப்பதற்கும், கொவிட்- 19 தொற்று நோயில் இருந்து மீள்வதற்கும் உலகெங்கிலும் உள்ள பெண்ககளின் அளப்பரிய முயற்சிகளுடன் இவ்வருட சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலைமைத்துவத்தில் உள்ள பெண்களால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் பல்வேறு விதமான, நிபுணத்துவம் வாய்ந்த அனுபவங்களைக் கொண்டுவர முடியும் என்றும் பெண் தலைவர்களைக் கொண்ட நாடுகள் கொவிட்- 19 நெருக்கடியைக் கையாள்வதில் வெற்றியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மீதான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதில்தான் நிலைபேரான அபிவிருத்தி தங்கியுள்ளதாகவும் அதற்கான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் ஹனா சிங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.