![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/UN_HumanRightsCouncil-UN-PhotoJean-Marc-Ferree-e1600773153837-1400x934-1-e1612038216111.jpg?fit=1024%2C572&ssl=1)
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருக்க, பலமான நாடுகள் ஏனைய உறுப்பு நாடுகளை அச்சுறுத்துவதாக வெளியுறவு செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே மோர்னிங் பத்திரிகைக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பலம்வாய்ந்த நாடுகள் உறுப்பு நாடுகளுக்கு நிதியுதவி மற்றும் கடன்களை வழங்குவதன் ஊடாக இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதை அச்சுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள 21 நாடுகளில் ஒரு மேற்கு நாடேனும் இல்லை என்றும் ஐநா மனித உரிமைகள் பேரவை மேற்குலக நாடுகளுக்குச் சார்பான அமைப்பு என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை மீதான புதுப்பிக்கப்பட்ட தீர்மானம் இணை அனுசரணை நாடுகளால் நாளை அதிகாரப்பூர்வமற்ற கலந்துரையாடலுக்காக முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானத்தை இணை அனுசரணை நாடுகள் இருபக்க ஒத்திசைவுடன் நிறைவேற்ற எதிர்பார்த்திருந்தாலும், இலங்கை வாக்கெடுப்புக்குச் செல்லத் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
கொவிட்- 19 மரணங்களை அடக்கம் செய்யும் விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், ஐநா பேரவையில் தமக்கு இருந்த 10 வாக்குகளை 15 வரை அதிகரிக்கும் என்றும் இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஐநாவில் இலங்கை மீதான வாக்கெடுப்பு 20 அல்லது 21 ஆம் திகதிகளில் நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதற்கு ஏற்ற விதத்தில் தாம் தயார்படுத்தல்களை மேற்கொள்வதாகவும் அத்மிரல் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.