July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ் அடிப்படைவாதமும் இஸ்லாம் மதவாதமும் நாட்டில் தலைதூக்க இடமளிக்கமாட்டேன்’

தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத, பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க அரசாங்கம் இடமளியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார்.

குருணாகல்,கிரிபாவ, வேரகலவில் நடைபெற்ற கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்ட நிகழ்வின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர்;

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும்.பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சாட்சிகள் குறித்து கவனம் செலுத்தும் போது, தலைதூக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம், மிகவும் செயல் திறன் மிக்க பொறுப்பை நிறைவேற்றத் தவறியதற்கான காரணத்தை புரிந்துகொள்வது விசாரணை நடத்தும் ஆணைக்குழுவிற்கு சிரமமானது என்று அறிக்கையின் 306 ஆம் பக்கத்தில் உள்ளது.

மேலும்,நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இலங்கையில் இருக்கிறார்கள், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுகிறது.இதனால் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அதனை செய்யத் தவறிவிட்டது.

எவ்வாறாயினும், தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத, பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது.

தற்போது நாம் அதிகாரத்தில் இருப்பதால், தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விற்று நாம் அதிகாரத்திற்கு வரவில்லை எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.