
யாழ்ப்பாணத்தில் சர்வதேச நீதியை வலியுறுத்தி இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தக்கோரி யாழில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மதத் தலைவர்கள் எனப் பலரும் தங்களது ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிரான இனவழிப்பு குற்றங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.