![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/03/Mexico-e1614838740922.jpg?fit=1024%2C634&ssl=1)
இலங்கையில் கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை இலங்கையில் பயன்படுத்த தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய இம்மாதம் இறுதியில் ரஷ்யாவில் இருந்து ஐந்து இலட்சம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் சுகாதார பணியகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் விதமாக பல்வேறு நாடுகளின் தடுப்பூசிகள் குறித்து தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை ஆய்வுகளை மேற்கொண்டதன் விளைவாக முதல் தடவையாக இங்கிலாந்தின் தயாரிப்பான ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் சீனாவின் இரு தடுப்பூசிகள் மற்றும் ரஷ்யாவின் வைரஸ் தடுப்பூசிகள் குறித்த ஆய்வுகளையும் தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை மேற்கொண்ட நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை இலங்கையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்தத் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் கெமிலியா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் இறுதிக்குள் இலங்கைக்கு ஸ்புட்னிக் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ரஷ்யாவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய முதல் கட்டமாக ஐந்து இலட்சம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவும் அடுத்த கட்டங்களில் தேவைக்கமைய தடுப்பூசிகளை கொள்வனவு செய்துகொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.