July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லசந்த விக்ரமதுங்கவின் மகள் “இலங்கையை அழிக்க” முயல்வதாக அரசாங்கம் குற்றச்சாட்டு

சண்டே லீடர் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலைக்கு இலங்கை அரசு நீதி மறுத்துவருவதாக அவரது மகள் அகிம்ஸா விக்ரமதுங்க வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு எழுதியிருந்த கட்டுரையை அரசாங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.

இலங்கைத் தலைவர்கள் மீது பயணக் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதிப்பதற்காக சர்வதேச சமூகத்தை திரட்டி “இலங்கையை அழித்து அதன் வீழ்ச்சியை பார்ப்பதற்கு” அகிம்ஸா விக்ரமதுங்கவும் மேலும் பலரும் முயற்சிப்பதாக வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

“புலம்பெயர் குழுக்கள் மற்றும் எதரணி அரசியல்வாதிகள் உள்ளிட்ட சில தரப்பினர்” அகிம்ஸா விக்ரமதுங்கவை இயக்குவதாக அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

“ஐநா மனித உரிமைகள் பேரவையில் நாடு சவால்களை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது துரதிஸ்டவசமானது” இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“குற்றவாளிகளை ஒருநாள் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி வழங்கும்” முயற்சியில் அகிம்ஸா வெற்றிபெறுவதற்காக வாழ்த்து தெரிவிப்பதாகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில்,

“2007 இல் பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்‌ஷ இருந்தபோது நடந்த ஆயுதக் கொள்வனவின் போது 10 மில்லியன் டொலர் ஊழல் நடந்திருப்பது பற்றி எனது தந்தை லசந்த விக்ரமதுங்க வெளிப்படுத்தியிருந்தார்.

ராஜபக்‌ஷ அவரை அவதூறு குற்றச்சாட்டில் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார்…பின்னர் எனது தந்தையின் பதிப்பகம் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது…

குறித்த ஆயுத ஊழல் தொடர்பில் எனது தந்தையிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுவதற்கு சில வாரங்களே இருந்த நிலையில், 2009 ஜனவரி 8 ஆம் திகதி எனது தந்தை பணிக்கு சென்று கொண்டிருக்கும் போது இராணுவ புலனாய்வாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

ராஜபக்‌ஷவையே அதற்கு நான் பொறுப்பாளியாக்குகின்றேன்…”

-என்று அகிம்ஸா விக்ரமதுங்க கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக வெற்றிபெற்று விட்டதால், தனது தந்தையின் படுகொலைக்கு நீதி கோரும் முயற்சிகள் வெற்றியளிக்காத நிலை நீடிப்பதாகவும் அவர் அந்தக் கட்டுரையால் தெரிவித்துள்ளார்.

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளும் சாட்சியங்களும் ராஐபக்‌ஷ அரசாங்கத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அகிம்ஸா அவரது நீண்ட கட்டுரையில் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.