June 15, 2025 22:27:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஹா சிவராத்திரி நிகழ்வுகளை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்

இந்து ஆலயங்களில் மஹா சிவராத்திரி நிகழ்வுகளை மிக சிறப்பாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு, இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்துக்களின் சிறப்பு விரதங்களில் ஒன்றான மஹா சிவராத்திரி விரதம் எதிர்வரும் 11 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அன்றைய தினத்தில் இந்து ஆலயங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளை சிறப்புற நடத்த ஊக்கமளிக்க வேண்டுமென்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைய இந்துக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பக்தி சார்ந்த கலை நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வுகளுக்கு தேவையான நிதி இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக வழங்கி வைக்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.