July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராஜகிரிய வீதி விபத்து: பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்கவுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல்

கொழும்பு ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கவனயீனமாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை மற்றும் விபத்தைத் தடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்காமை போன்ற குற்றச்சாட்டுகள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவன் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை அப்போதைய அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்கவே செலுத்தினார் என்றும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞனின் தரப்பினர் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே, சட்டமா அதிபர், சம்பிக்க ரணவக்க மீது இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான ஆட்சேபனைகளை முன்வைக்கும் வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.