July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பெருந்தோட்ட அதிகாரிகள் பாதுகாப்புக்காக துப்பாக்கி கோரி போராட்டம் நடத்துவது நகைப்புக்குரியது”

தமது பாதுகாப்புக்காக துப்பாக்கி கோரி பெருந்தோட்ட அதிகாரிகள் போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியதாகும் என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தோட்ட அதிகாரிகளை போன்று தொழிலாளர்களும் தங்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கி கோரினால் என்னவாகும் என்று தோட்ட அதிகாரிகள் சிந்திக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தோட்டங்களில் தமது பாதுகாப்பை உறுதிபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி பெருந்தோட்ட துரைமார்கள் உட்பட அதிகாரிகள் இன்று ஹட்டனில் ஆர்ப்பட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது, தமக்கு துப்பாக்கி பயிற்சி வழங்கி, பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வழங்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தொழிலாளர் உரிமைகளை மதித்து, தோட்ட நிர்வாகத்தை சரியான முறையில், சட்ட திட்டங்களுக்கமைய முன்னெடுத்துச் செல்லும் பட்சத்தில் இவ்வாறான கோரிக்கைகளை தோட்ட அதிகாரிகள் முன்வைக்க நேரிடாது என்று தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் உரிமை என்பது மதிக்கப்பட வேண்டும் என்றும், பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றைப் பேசித் தீர்த்துக் கொள்வதே ஜனநாயக பண்பு எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களை வன்முறைக்கு இழுத்துவிடும் இவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பின்நிற்கப் போவதில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.