July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.நா.பிரேரணை தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு விரைவில் வெளிவரும் என்கிறார் சம்பந்தன்

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய அறிக்கை விரைவில் வெளியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைப் படையினருக்கு எதிரான வெளிநாட்டு விசாரணைகளைத் தடுப்பதற்கும் அவர்களுக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான விசேட சட்டங்களை இயற்றுவதற்கு இலங்கை அரசு தயாராகவே உள்ளது என்று கல்வி அமைச்சரும் சட்டத்துறை நிபுணருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்த கருத்து தொடர்பில் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீது பிரிட்டன் தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவு தொடர்பிலும், நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழர்களின் நிலைப்பாடு குறித்தும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட படையினரைக் காப்பாற்ற இலங்கை அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விரிவான அறிக்கையொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் வெளியிடவுள்ளது.

தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக்கூற வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.சர்வதேசமும் இந்த விடயத்தில் இருந்து ஒருபோதும் விலகக்கூடாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.