
தனது அரசாங்கத்தில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுத்து அதன் மூலம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அண்மையில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து பல்வேறு தரப்பினர் தமது கருத்துக்களை முன்வைத்துவரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையின் ஒரு பகுதி தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் இதனை வைத்து எவ்வாறு ஈஸ்டர் தாக்குதல் குறித்த முழு விபரங்களை அறிய முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இவ்வாறு முழுமையற்ற அறிக்கையை எதற்காக நாட்டிற்கு சமர்ப்பிக்கின்றனர்? என கேள்வி எழுப்பினார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் முழுமையான விசாரணை முன்னெடுக்கும் என தெரிவித்த அவர் தேவை ஏற்பட்டால், பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை முன்னெடுத்து குற்றம் இழைத்த அனைவரையும் தூக்கிலிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.