May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதித்த இலங்கை அரசுக்கு நன்றி’ -இம்ரான் கான்

(FilePhoto)

கொவிட் வைரஸ் தொற்றுக் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசு அனுமதி அளித்தமைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 நோயினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அது தொடர்பாக நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர் குழு அனுமதித்த நிலையில் அதற்கான வர்த்தமானி அறிவிப்பை நேற்றையதினம் அரசாங்கம் வெளியிட்டது.

இதற்கமைய பாகிஸ்தான் பிரதமர் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கும் இலங்கைக்கு தனது நன்றிகளை தெரவித்துக்கொள்வதுடன் இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரவேற்கிறேன் எனவும் அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான், இலங்கைக்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டபோது, கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை, அவர்களின் மத நம்பிக்கைக்கு மாறாக எரிக்கும் இலங்கையின் கொள்கைக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் குரல்கொடுக்க வேண்டுமென முஸ்லிம் தலைவர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், இம்ரான் கான் பாகிஸ்தானுக்கு புறப்பட முன்னதாக முஸ்லிம் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்கள்.

இதன்போது ‘எல்லா இலங்கையர்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்தவும் பிரஜைகளின் கவலைகளை போக்கவும் இலங்கையின் தலைவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்’ என்று இம்ரான் கான் நம்பிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.