July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமஷ்டி முறையிலான ஆட்சி அதிகாரங்கள்தான் எமக்கு தேவை – உயர் ஸ்தானிகரிடம் தமிழ் பிரதிநிதிகள் தெரிவிப்பு!

13 ஆவது திருத்தச்சட்டம் தமிழர்களுக்கு போதுமானது இல்லை. சமஷ்டி முறையிலான ஆட்சி  அதிகாரங்கள்தான் எமக்கு தேவை என்றும், அதுதான் எமது நாட்டினை பொறுத்தவரையில் சரியான ஒரு ஆட்சி முறையாக இருக்கும் என்றும் தமிழ் பிரதிநிதிகள் இந்திய உயர் ஸ்தானிகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நடைமுறை பிரச்சினைகள் குறித்து தமிழ் பிரதிநிதிகள் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவை கொழும்பில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் தற்போதைய யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், வட மாகாண முன்னாள் அமைச்சர் ஆனந்தி சசிதரன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சிற்பரன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கு,கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் அரசாங்கம் எவ்வாறான விடயங்களை கையாளுகின்றது என்பது தொடர்பிலும், மாகாண சபைக்கு கீழ் இருந்த அதிகாரங்கள் எவ்வாறு மத்திய அரசாங்கத்திற்கு கீழ் கொண்டு செல்லப்பட்டது என்பது தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதுவுமே இல்லாது இருக்கின்ற சூழ்நிலையை தவிர்த்து, இருக்கின்ற ஒன்றாக மாகாண சபையை ஏற்றுக் கொள்ள வேண்டும். தொடர்ந்து அதில் அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வது, மற்றும் பெற்றுக் கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து உயர் ஸ்தானிகரால் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாக பிரதிநிதிகள் உறுதிப்படுத்தினர்.

விக்கினேஸ்வரன் தரப்பினர் தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியான காணி பறிப்பு, தமிழ் மக்களின் இருப்பு எவ்வாறு இல்லாமல் செய்யப்படுகின்றது போன்ற விடயங்கள் தொடர்பிலும் இந்திய உயர் ஸ்தானிகர் எடுத்துக்கூறியுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்வதாக கூறிக்கொண்டு காணிகளை சீன நிறுவனங்களுக்கும், சிங்கள முதலாளிகளுக்கு கொடுக்கப்படும் நிலையே காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சீன நிறுவனங்களுக்கு மாற்று மின்சார உருவாக்கம் என்ற கோணத்தில் காணிகளை கொடுப்பது எதிர்காலத்தில் எவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது தொடர்பலும் இரு சாராரும் கலந்துரையாடியுள்ளனர்.

பலாலி விமான நிலையம் செயலிலந்து வருகின்றமை தொடர்பில் தூதுவரிடம் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, எந்த நிலையிலும் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக செயற்படும் என்று உறுதிப்படுத்தியிருந்த தூதுவர் இது குறித்து அரசாங்கத்துடன் பேசப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தலைமன்னார் – இராமேஸ்வரத்திற்கு இடையிலான கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதன் ஊடாக வியாபார, வர்த்தக நடவடிக்கைகள் மட்டுமல்லாது வேலைவாய்ப்புக்களையும் அதிகாரிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் தமிழர் தரப்பினர் தூதுவரிடம் எடுத்துக்கூறியுள்ளனர்.

அதேபோல் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வருவதன் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் வெவ்வேறு துறைகளில் உள்ள வெற்றிடங்களை பூர்த்தி செய்வது தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி, ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தூதுவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை விடயம் தொடர்பில் ஜெனீவாவில் வரப்போகும் தீர்மானம் தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.