October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இந்தியாவின் ஆதரவின்றி ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு சாத்தியமில்லை”

இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வு இலங்கையில் சாத்தியமில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவினுடைய நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் மக்கள் இருக்கின்றார்கள்.

ஆனால் அவ்வாறான சூழல் தற்போது அமையவில்லை ஐநாவினுடைய நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவது வரைபிலேயே இலங்கைக்கு எதிரான சில விடயங்கள் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனென்றால் தற்போதைய சூழ்நிலையில்  மக்களுடைய எதிர்பார்ப்பு என்பது இலங்கையை ஒரு குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று அங்கு சரியான முறையில் உண்மைகள் விசாரிக்கப்பட்டு மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான்.

அந்த வகையில் பன்னாட்டு சமூகம்  எமது மக்களுடைய நீதிக்காக செயற்பட வேண்டும். உண்மையிலேயே இதற்கு இந்தியாவினுடைய அங்கீகாரம், அனுசரணை தேவையாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவினுடைய ஆதரவு எமக்கு கிடைக்குமாக இருந்தால் உலகமும் நமது பக்கம் திரும்பிப் பார்க்கும்.

அத்தோடு எமது மக்களுடைய நியாயமான பிரச்சனைக்கு தீர்வு காண முன்வரும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.