May 31, 2025 12:10:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘செல்வாக்கை பயன்படுத்தி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முயற்சி’ – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Vaccinating Common Image

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சிலர் முறையற்ற ரீதியில் செல்வாக்கைப் பயன்படுத்தி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முனைவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை பட்டியலுக்கு அமைய தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் சிலர் திட்டத்தை மீறி தடுப்பூசி மையங்களுக்குச் சென்று வெவ்வேறு அடையாளங்களையும் பதவிகளையும் பயன்படுத்தி தம்முடன் வருபவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குமாறு வற்புறுத்திவருவதாக அவர் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும். அதுவரை பொறுமையாக இருக்கும்படி பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்  கேட்டுக்கொண்டுடார்.

அத்தோடு நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பு தமது மருத்துவ அறிக்கையை வழங்க வேண்டும் எனவும் விசேட மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.