July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: ”ஆணைக்குழு அறிக்கையில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான சாட்சியங்களும் உள்ளன”

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான சாட்சியங்களும் இருப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த சாட்சியங்கள் தொடர்பான தகவல்களை மூடி மறைக்கும் நோக்கிலேயே குறித்த அறிக்கையை ஆராயவென கூறி குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சஹ்ரானின் மனைவியினால் வழங்கப்பட்ட சாட்சியமே இதில் முக்கியமானது எனவும், அவரின் சாட்சியத்தில் தற்போதைய அரசாங்கத்திலுள்ளவர்கள் சிலர் பற்றிய தகவல்கள் இருப்பதாகவும் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் சட்ட விரோதமான வகையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.