![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/selvam-e1613733565382.jpg?fit=1024%2C602&ssl=1)
‘ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றினால் நாடு இரண்டாக உடையும்’ என பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்து எமக்கு தனித் தமிழீழத்தை பெற்றுத் தந்து விடும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் வடக்கு கிழக்கு தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்றே சரத் வீரசேகர செயற்படுகின்றார். ஆகவே தமிழீழம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள், பொது மக்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை பொலிஸார் தேடித் தேடி விசாரிக்கின்றார்கள்.
நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும், நீதிமன்றத்தை தமிழர்கள் அவமதித்துள்ளார்கள் எனக் காட்டுவதற்காகவே இந்த முயற்சி நடைபெறுகின்றாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் பொலிஸாரின் நடவடிக்கையானது நீதிமன்ற ஆணையை நாம் புறக்கனிக்கின்றோம் என்ற அச்சத்தைக் கொண்டுவந்து எமது மக்கள் போராட்டத்தை மழுங்கடிக்கின்ற மற்றும் ஐ.நா. சபையில் எமது கோரிக்கைகளை இல்லாது செய்கின்ற முயற்சியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை இறுதி யுத்த வெற்றியை பயங்கரவாதத்தை அழித்து விட்டோம் என்று கொண்டாடியதுடன் பயங்கரவாதத்தை அழிப்பது எப்படி என்று பாடம் எடுக்கப்போவதாகவும் கூறினார்கள்.
அந்த வகையில் உலக நாடுகள் நிச்சயமாக எங்களுடைய பக்கம் கரிசனை காட்ட வேண்டும். அதுவே எமது பிரதான நோக்கமாக இருக்கின்றது எனவும் செல்வம் அடைக்கலாநாதன் தெரிவித்துள்ளார்.