![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/58462814_917597891923901_8276578373698846720_n-e1613638687582.jpg?fit=960%2C547&ssl=1)
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட சாரா என்ற பெண் இந்தியாவில் உள்ளாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் சாராவும் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், அது தொடர்பாக மரபணு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தாக்குதல் நடத்தியவரின் மனைவியான சாரா என்பவர் சம்பவத்தின் பின்னர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்படுகின்ற போதும், இன்னும் அவர் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்தியாவில் இருந்து மீண்டும் அவர் இலங்கைக்கு வந்துள்ளார் என்றும் தகவலும் கிடைக்கின்றன. ஆனால் எதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
எனவே இந்திய புலனாவுத்துறையுடனும், சர்வதேச பொலிஸுடனும் இணைந்து இந்த விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம். இராஜதந்திர ரீதியிலும் இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். அவர் உயிருடன் இருந்தால் அவரை நிச்சயமாக கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.