![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/myanmar-1.jpeg?fit=1024%2C683&ssl=1)
மியன்மாரின் மன்டலாய் நகரில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்களை கலைப்பதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் வன்முறைகளை பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிஸாரும் படையினரும் ரப்பர்குண்டுகளையும் கவன்களையும் பயன்படுத்துவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த வன்முறை சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக மாணவர் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
மியன்மாரில் படையினர் பெருமளவு குவிக்கப்பட்டிருந்த போதிலும் நாட்டின் ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரவிக்கப்படுகின்றது.
மாணவர்களும் பௌத்தமத குருமார்களும் தமக்கு இராணுவஆட்சி வேண்டாம் என்ற பதாகைகளுடன் படையினருக்கு முன்னால் நிற்பதை காண்பிக்கும் படங்களும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.
இராணுவத்தினர் வாகனங்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் கைது மற்றும் சுட்டுக்கொல்லப்படலாம் என்ற அச்சத்தையும் மீறி மக்கள் வீதிகளில் பேரணிகளை முன்னெடுத்துவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.