July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: ”30 பேரின் தகவல்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன”

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 30 பேருக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் அவர்கள் தொடர்பான தகவல்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளர்.

மனித கொலைகள் மற்றும் சூழ்ச்சிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் கீழே இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

30 பேரினதும் தகவல்கள் அடங்கிய அறிக்கை கிடைத்ததும் சட்டமா அதிபர், அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரங்களை தாக்கல் செய்ய நடவடிக்கையெடுப்பார் என்று அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை வழங்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரே, ஜனாதிபதியின் செயலாளரிடம் நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக இன்று ஊடகவியலாளர்கள் அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேட்ட போதே அவர், குறித்த தகவல்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக அதே ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி, அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இவ் ஆணைக்குழு, தமது இறுதி அறிக்கையை 2021 பெப்ரவரி 01 ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் ஒப்படைத்திருந்தது.

இதில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீதும் குற்றவியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.