July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடு பூராகவும் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை: 3,880 பேர் கைது!

இலங்கையில் சகல பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் நேற்று நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 3,880 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை முதல் நடத்தப்பட்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் நாடு பூராகவும் 494 பொலிஸ் நிலையங்களை சேர்ந்த 16,894 பொலிஸ் உத்தியோகத்தர் ஈடுபடுத்தப்பட்டிருந்தாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் போது நீதிமன்றங்களினால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்த 1572 பேரும், பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த 127 பேரும், சட்டவிரோத போதைப் பொருட்களை வைத்திருந்த குற்றங்களில் 983 பேரும் மற்றும் வேறு குற்றங்கள் தொடர்பாக சந்தேகத்தில் 672 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வீதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 518 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த நடவடிக்கையில், 60 மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.