July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அகழ்வாராய்சிகள் சர்வதேச மேற்பார்வையுடன் நடக்க வேண்டும்’ : பளை பிரதேச சபையில் தீர்மானம்

வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் தொல்பொருள் ஆய்வுகளின் போது சர்வதேச ஆய்வாளர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் பீட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் மாதாந்த பொதுச்சபை அமர்வு இன்று சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது தமிழர் தாயக பிரதேசங்களில் தொல்பொருள் ஆய்வு செய்யும் போது எமது அடையாளங்கள் ஆய்வாளர்களாலேயே திட்டமிட்டு மாற்றப்படுவதாக மக்கள் அஞ்சுகின்றதாக பிரதேச சபை தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் குருந்தூர் மலையில் அகழ்வின் போது மேலெழுந்த பல்லவர்கால தாரா லிங்கத்தைக் கூட பௌத்த மத அடையாளமாக தொல்பொருள் திணைக்களம் சித்தரிக்கின்றன என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தோடு மக்கள் பொல்பொருள் திணைக்களத்தினர் மேல் நம்பிக்கையற்று இருக்கின்றனர். எனவே மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டுமானால் ஒரு சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதேசபை தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைய இந்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட சபை உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.