![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/mahi-mahi-e1612952115590.jpg?fit=1024%2C571&ssl=1)
(File Photo)
இலங்கை சிறைச்சாலைகளில் அரசியல் குற்றச்சாட்டுகளின் கீழ் எந்தவொரு கைதியும் தடுத்து வைக்கப்படவில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் இரா.சாணக்கியனால் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
”இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவைக்கு அமைவாகவோ அல்லது நாட்டின் வேறு சட்டங்களுக்கு அமையவோ தண்டனை வழங்கப்பட்டுள்ள மற்றும் சந்தேகத்தில் தடுத்து வைக்ககப்பட்டுள்ள கைதிகளிடையே அரசியல் குற்றச்சாட்டுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எவரும் இல்லை” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பாகவும் சாணக்கியனால் கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பில் குறிப்பிட்ட பிரதமர், தேசியப் பாதுகாப்புக்கு பாதிப்பானது என்பதனால் அது தொடர்பாக பதிலளிக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.