
(Photo: Cheng Lei/Twitter)
அரச இரகசிய தகவல்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய பத்திரிகையாளரான செங் லீ சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங் லீ சீனாவில் தடுத்து வைக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், விசாரணைக்காக சீன அரசாங்கம் இன்று முறையாகக் கைது செய்துள்ளது.
இதேவேளை சீனாவின் இரகசியங்களை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு வழங்கியுள்ளதாக சந்தேகத்தின் பேரில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் செங் லீயும் ஒருவராவார்.
சீனாவில் பிறந்த செங் சீன சிஜிடிவி (CGTN) ஆங்கிலத் தொலைக்காட்சியொன்றில் வணிக நிகழ்ச்சியொன்றினை தொகுத்து வழங்கினார்.
பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் செங் லீ கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டதையடுத்து அவரை விடுதலை செய்யவேண்டும் என சர்வதேச அளவில் வேண்டுகோள்கள் தொடர்ந்தும் வெளியாகிக் கொண்டிருந்தது.
சர்வதேச விழுமியங்களின் அடிப்படையில் நீதி, மனித உரிமை போன்றவை பின்பற்றப்படும் என அவுஸ்திரேலியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை அவருடைய சட்டத்தை பயன்படுத்துவதற்கான உரிமைகளும் மதிக்கப்படும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.