July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் 138 குளங்களை சீரமைக்கும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சௌபாக்கிய கொள்கையின் கீழ் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இசைமாலைத்தாழ்வு குளத்தை வைபவ ரீதியாக புனரமைப்பு செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே. திலீபன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ. ஸ்ரான்லி டி மெல், நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம், பிரதேச செயலாளர்கள், நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், கமநல சேவை திணைக்கள மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள உயர் அதிகாரிகள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச சபை பிரதிநிதிகள் மற்றும் கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த திட்டம் 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.