July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கிரிக்கெட்டுக்கு ஒத்துழைக்க சங்கா- மஹேல முன்வந்ததால் குழப்பமாக உள்ளது’: முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர்

இலங்கையின் கிரிக்கெட் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் முன்வந்துள்ளதால் தான் குழப்பமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளமை ஆச்சரியமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் போது, கிரிக்கெட் தொடர்பான விடயங்களில் சங்கா மற்றும் மஹெலவை இணைத்துக்கொள்ள முயற்சித்தாலும், அவர்கள் மறுப்புத் தெரிவித்ததாகவும் ஹரின் தெரிவித்துள்ளார்.

தனது வீட்டில் அவர்கள் இருவரிடமும் இலங்கையில் கிரிக்கெட் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு பங்களிப்புச் செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும், அவர்கள் இலங்கை கிரிக்கெட் முறைமையில் நம்பிக்கையில்லை எனக் கூறியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் பலவீனமான நிலையில் இருந்த காரணத்தினால், அவர்கள் சர்ச்சையில் சிக்க விரும்பாமல் இருந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர்கள் இலங்கை கிரிக்கெட்டுக்குப் பங்களிப்பு செய்ய முன்வந்ததையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.