July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஐநாவில் இலங்கை மீதான நடவடிக்கைக்கு கனடா மீண்டும் தலைமையேற்க வேண்டும்’: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

இலங்கை விவகாரம் தொடர்பாக ஐநாவில் கனடா தலைமைத்துவம் வழங்குவது மீண்டும் தேவையாக உள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் கனடாவுக்கான இயக்குநர் பரீடா டெய்வ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னர் நல்லிணக்கத்தையும் நீதியையும் ஏற்படுத்துவதற்கான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பங்களிப்பு செய்த நாடுகளில் ஒன்றாக கனடா காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை நிலவரம் மீண்டும் மோசமடைகின்றதாகவும், இராஜதந்திர நடவடிக்கைகளை எடுப்பதற்கான செயற்பாடுகளைத் தீவிரப்படுத்துவது குறித்து கனடா கவனம் செலுத்துவது முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை அதன் தற்போதைய பாதையில் செல்ல அனுமதிப்பதா அல்லது பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களைப் பாதுகாத்து, சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதா என்ற முக்கிய கேள்வியுடன் இம்முறை மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பமாகின்றதாகவும் பரீடா தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிகளுக்கு தலைமை தாங்கக்கூடிய இடத்தில் கனடா இருக்கின்றதாகவும், சர்வதேச குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை தீவிரப்படுத்துவது பயங்கரங்களைத் தடுத்து நிறுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.