July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசியல் நாடகங்களால் ஜனாதிபதியாகவில்லை; எனது முறைப்படியே பணியாற்றுவேன்’

தன்னை பலரும் பல்வேறு விதமாக விமர்சித்தாலும் தான், தனது முறைப்படியே பணியாற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கேகாலை திக்வெல்ல கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

கிராமங்களுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளை தேடி, ஆராய்வது அரசியல் நாடகங்கள் அல்ல என்றும் தேர்தல் காலங்களிலேயே அரசியல் நாடகங்கள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளின் கண்களுக்குப் புலப்படாத மக்கள் பிரச்சினைகளைக் கலந்துரையாடி, தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவே தான் பின்தங்கிய கிராமங்களுக்கு விஜயம் செய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியில் இருக்கும் போது, மக்களின் பிரச்சினைகளைத் தேடிச் சென்றாலும், ஆட்சிக்கு வந்ததும் மக்களை மறந்து விடுவதாகவும், தாம் அவ்வாறு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதேச சபைத் தேர்தலொன்றில் கூட போட்டியிடாத தன்னை, பாதுகாப்பு செயலாளராக மேற்கொண்ட சேவைகளைப் பார்த்தே மக்கள் தன்மை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.