July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணத்தில் கைத்தறி மற்றும் பற்றிக் தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய இராஜாங்க அமைச்சர் இணக்கம்!

உள்ளூர் கைத்தறி மற்றும் பற்றிக் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை குடாநாட்டின் பல பிரதேசங்களிலும் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இணக்கம் தெரிவித்துள்ளார்.

வேலணை, புங்குடுதீவு பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இவ் இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது யாழ் மாவட்டத்தில் சுயதொழிலில் ஈடுபடக் கூடிய இளைஞர் யுவதிகளை இணைத்து பயிற்சிகளை வழங்குவதுடன் உள்ளூர் பற்றிக் உற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்து தருமாறும் குறித்த கட்சியினர் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயரத்ன, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மக்கள் நலன் கருதிய யோசனைகள் ஒவ்வொன்றையும் இந்த அரசு குடாநாட்டு மக்களுக்காக செய்துகொடுக்கத் தயாராக உள்ளது என்றார்.

அதேபோன்று யாழ் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் இதுபோன்ற நிலையங்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளைத் தாம் விரைவில் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.