July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரவி, அலோசியஸூக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல்!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் சட்டத்தின் பிரிவு 19 (C) இன் கீழ் இக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் செல்ல இரு பிரதிவாதிகளுக்கும் நிபந்தனைகளுடன் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இதேவேளை, வழக்கு விசாரணை நிறைவு பெறும் வரை வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

2016 ஆம் ஆண்டில் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக பதவி வகித்த போது, அர்ஜுன் அலோசியஸ் பணிப்பாளராக பதவி வகித்த ‘வோல்ட் & ரோ அஸோஸியேட்ஸ்’ நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட, காசோலையை பயன்படுத்தி கொள்ளுப்பிட்டி பகுதியில் 11.68 மில்லியன் ரூபா பெறுமதியான வீடொன்றை வாடகைக்குப் பெற்றமை, அதற்கு ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் இருவருக்கும்  எதிராக இக் குற்றப்  குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.