October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை: “பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது அல்ல” – சுமந்திரன்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது சிறுபான்மை மக்கள், தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே தவிர பெரும்பான்மை இன மக்களுக்கு எதிரான பேரணியல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது சிறுபான்மை மக்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையைக் கண்டித்தும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காகவும் தான் இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் 73ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தான் ஒரு “சிங்கள பௌத்தன்” என்று தெரிவித்திருந்தார்.

அவர், அவ்வாறு கூறியது எங்களுக்குப் பிரச்சினை இல்லை. எனினும், இந்த நாட்டின் ஜனாதிபதி, பெரும்பான்மை மக்களுக்கும் மாத்திரம் சேவையாற்றுவேன் என்று தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “எங்களுக்கும் இந்த நாடு சொந்தமானது, எனவும் எங்களின் உரிமைகளை அகற்றமுடியாது. இதனடிப்படையில், நாங்கள் இந்தப் பேரணியை முன்னெடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்தப்போராட்டம் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் சிங்கள, பௌத்த மக்களுக்கு இருக்கும் சகல உரிமைகளும் தமிழ் பேசும் மக்களாகிய எங்களுக்கும் உள்ளது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.