July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணிக்கு பருத்தித்துறை நீதிமன்றம் தடை உத்தரவு

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் பொலிஸாரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.

பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகி கடும் ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.

இதனையடுத்து இருதரப்பு விடயங்களையும் ஆராய்ந்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன், பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்று தடை உத்தரவு வழங்கி கட்டளை வழங்கினார்.

பேரணியில் பங்கேற்போர் பல மாவட்டங்கள் ஊடாக அங்குள்ளவர்களையும் இணைத்து வருவதனால் கொவிட் -19 நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த தடை உத்தரவு வழங்கப்படுகிறது என்று நீதிவான் கட்டளையில் சுட்டிக்காட்டினார்.