May 28, 2025 21:31:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”உரிமைப் போராட்டத்துக்கு மலையக மக்கள் முன்னணி பூரண ஆதரவை வழங்கும்”

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பளப் போராட்டம் மற்றும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான தமிழரின் உரிமைப் போராட்டம் ஆகியவற்றுக்கு மலையக மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை வழங்குவதாக முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் தோட்டத் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்படும் ஆயிரம் ரூபா கோரிக்கை போரட்டத்திற்கு நாங்கள் ஆதரவை வழங்குகின்றோம். தொழிலாளர்கள் மத்தியில் பிளவு ஏற்படாமல் உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரண்டு காட்ட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்கின்றோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, வடக்கு, கிழக்கில் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டத்துக்கும் மலையக மக்கள் முன்னணி முழு ஆதரவை வழங்குகின்றது. இது தொடர்பில் மாவை சேனாதிராஜாவுடன் கலந்துரையாடினோம். அவர்களும் எமது சம்பள உயர்வு போராட்டத்துக்கு ஆதரவை வழங்கியுள்ளனர் என்றும் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.