July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போராட்டத்துக்கு தடைகோரி சுன்னாகம் பொலிஸார் தாக்கல் செய்த தடை உத்தரவு மனு வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைப்பு

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதற்குத் தடை கோரி சுன்னாகம் பொலிஸார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பத்துக்கு சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையைக் கோரி நாளை மறுதினம் வரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அத்துடன், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை பொலிஸார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பங்களையும் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கவும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தவணையிட்டுள்ளது.

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பம் சுன்னாகம் பொலிஸாரால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த விண்ணப்பம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

போராட்டங்கள் நடத்தப்படுவதால் கொவிட் -19 சுகாதார நடைமுறைகள் மீறப்படுகின்றனவா? என்பது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையைப் பெற்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.